மௌனகுரு படத்துக்கு பிறகு சாந்தகுமார் 8 ஆண்டுகள் கழித்து இயக்கியப் படம் என்பதால் மகாமுனி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரிலிஸான போது அதன் திரைக்கதை தொய்வு காரணமாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் ரிலிஸுக்கு பின்னர் படக்குழு பல விருது விழாக்களில் விருது வென்றது.
இந்நிலையில் சாந்தகுமார் அடுத்த படமாக ரசவாதி கடந்த மாதம் வெளியானது. அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் ஜி எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகிக் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் திரையரங்கில் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதன் பின்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆனது.
ரசவாதி படத்தைப் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வந்தனர் படக்குழுவினர். இந்நிலையில் தற்போது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் இந்த படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார் நடிகர் அர்ஜுன் தாஸ். இந்த படத்துக்காக அவர் பெறும் மூன்றாவது விருது இதுவாகும்.