சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா பயணத்தின் முதல் திரைப்படமான 'அபூர்வ ராகங்கள்' முதல் அவரது 50-வது ஆண்டை குறிக்கும் 'கூலி' திரைப்படம் வரை, சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி சினிமாஸ் திரையரங்கம் தொடர்ந்து திரையிட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
1975-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம், ரஜினியின் திரையுலக அறிமுகத்தை உலகிற்கு அறிவித்தது. அப்போது, சென்னையில் மிட்லாண்ட், அகஸ்தியா, ராக்ஸி, கிருஷ்ணவேணி ஆகிய திரையரங்குகளில் படம் வெளியானது. இதில், கிருஷ்ணவேணி சினிமாஸை தவிர மற்ற திரையரங்கங்கள் தற்போது மூடப்பட்டுவிட்டன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படம் ரஜினியின் 50 ஆண்டுகால திரைப் பயணத்தின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அபூர்வ ராகங்கள் வெளியான அதே கிருஷ்ணவேணி சினிமாஸ், 'கூலி' திரைப்படத்தையும் திரையிடுவது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
165-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இன்றும் இந்திய சினிமாவின் வசூல் மன்னனாகத் திகழும் ரஜினிகாந்தின் திரைப் பயணத்துடன் இணைந்து வந்த ஒரே திரையரங்கம் இதுதான் என்று கூறப்படுகிறது. அபூர்வ ராகங்கள் படத்தை கிருஷ்ணவேணியில் பார்த்த பழைய ரசிகர்கள், 'கூலி' படத்தையும் அதே அரங்கில் பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.