இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள கூலி படம் இன்னும் 6 நாட்களில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே நேற்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டு A சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த படம் 2 மணிநேரம் 50 நிமிடம் ஓடும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்துக்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் வசூலில் பாதிப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள பிரபல தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் “தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளில் இந்த படத்துக்கு A சான்றிதழ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதுபோல மல்டிப்ளக்ஸ் திரைகளிலும் குழந்தைகளை உள்ளே விடமாட்டார்கள். இதனால் குடும்பமாக வருபவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.