ஐபிஎல் இறுதி போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், அகமதாபாத்தில் 62% இன்று மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தான் இந்த ஆண்டின் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்றைய இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. வானிலை முன்னறிவிப்பின் படி, ஜூன் மூன்றாம் தேதி 62% மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும், ஆனால் அதே நேரத்தில் ஏழு மணிக்கு பின்னர் மழை அளவு குறையும் என்றும் கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், குவாலிபையர் 2 போட்டியில் மழை காரணமாக ஆட்டம் தாமதமானதால், வானிலையை நம்ப முடியாது என்றும், போட்டி தொடங்கும் முன்பு அல்லது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒருவேளை இன்று மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால், 'ரிசர்வ் டே' என்று அறிவிக்கப்பட்டுள்ள நாளை போட்டி நடைபெறும். நாளையும் மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டால், லீக் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற அணி சாம்பியன் என்று அறிவிக்கப்படும்.
ஆனால் அதே நேரத்தில், லீக் போட்டியில் இரண்டு அணிகளுமே 19 புள்ளிகள் எடுத்துள்ளதால், ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி செல்லும் வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.