நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் மற்றும் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு 24 லட்சம் ரூபாய், ஹர்திக் பாண்டியாவுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய போட்டி மழையால் தாமதமாக இருந்தாலும், மாற்றி அமைக்கப்பட்ட விதிகளின் படி இரண்டு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டதால், முழுமையாக 20 ஓவர் போட்டி நடைபெற்றது. ஆனால், இந்த போட்டியில் இரு அணிகளும் மெதுவாக பந்து வீசியதற்காக இரு அணி கேப்டன்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மந்தமாக பந்து வீசியதற்காக, பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல், அந்த அணியின் அனைத்து வீரர்களுக்கும் சம்பளத்தில் 25% அல்லது 6 லட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அது தனித்தனியாக அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் பஞ்சாப் அணிக்கு எதிராக மந்தமாக பந்து வீசிய தவறுக்காக 30 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், அந்த அணியின் அனைத்து வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் 50% அல்லது 12 லட்சம் இவற்றில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளின் கேப்டன்களும் ஒரே தவறான மந்தமான ஓவர்கள் பிரச்சனைக்காக அபராதம் பெற்றாலும், அபராத தொகையில் வித்தியாசம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.