Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூரி ஜெகன்நாதர் கோவிலில் நடக்கும் அதிசயம் என்ன தெரியுமா....?

பூரி ஜெகன்நாதர் கோவிலில் நடக்கும் அதிசயம் என்ன தெரியுமா....?
ஒடிசா மாநிலத்தில், பூரி கடற்கரை நகரத்தில் அமைந்தள்ள இக்கோவிலின் ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றதாகும். ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும் தேரோட்டத் திருவிழாவில், லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கிறார்கள்.
வைணவத் திருக்கோயில்களில் ஒன்றான பூரி ஜெகன்நாதர் கோவில் 12ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்க குல அரசன் ஆனந்தவர்மனால் கட்டப்பட்டது. தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பாலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர். ஆண்டுதோறும், 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர், திருவிழாவிற்காக  மரத்தால் கட்டப்படுகிறது.
 
பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர்  புறப்படும்.
 
இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும்  வகையில் அமைந்துள்ளது. மரத்தால் ஆன இத்தெய்வத் திருமேனிகள், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால்  செதுக்கி அமைக்கப்படும்.
 
புராண கதை: 
 
பூரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, பூரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக்  கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு நாள் ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதைக் கொண்டு  காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து  பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி  உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். 
 
அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது  என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன்  வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள்  சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே  இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. 
 
இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று  அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகன்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த  சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுகப்பிரசவம் நடைப்பெற தினமும் சொல்லவேண்டிய மந்திரம் என்ன தெரியுமா...?