தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக நாடகம் போடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முடிவு குறித்து திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி தீர்மானமும் நிறைவேற்றியது. இதில் அதிமுகவும் திமுகவுடன் ஆதரவாக தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து வாக்களித்தது. ஆனால் அதன் பின்னர் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுவதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி “4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் நன்றாக சிரித்து பேசிவிட்டு, நாடகமாடியதாக கூறுகிறார். நாங்கள் ஆடியது நாடகம் என்றால் அந்த நாடகத்தில் உங்களுக்கு காமெடி வேடமா? வில்லன் வேடமா? என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்” என கூறியுள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தை எந்த குறையும் சொல்ல முடியாததால் அதிமுகவினர் இவ்வாறு பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K