Publish Date: Wed, 11 Apr 2018 (16:59 IST)
Updated Date: Wed, 11 Apr 2018 (17:00 IST)
கடந்த பல ஆண்டுகளாக தீராமல் இருந்த காவிரி பிரச்சனைக்கு கடந்த பிப்ரவரி மாதம் இறுதித்தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளித்தது. ஆனால் அந்த தீர்ப்பில் இடம்பெற்றிருந்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவதால் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த நிலையில் காவிரி தாயுடன் உரையாடுவது போன்று காமெடி நடிகர் விவேக் கவிதை ஒன்றை எழுதி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த கவிதை இதோ:
நான்: காவிரித் தாயே! காவிரி தாயே!
கன்னட மண்ணில் பூ விரித்தாயே! - ஏன்
தமிழ்மகன் கேட்டால் கை விரித்தாயே?
காவிரி: முத்து மகனே! முட்டாள் மகனே!
கைவிட்டது நானா நீயா?;
செழித்துப் பாய்ந்தேன்; நீ சேமித்தாயா?
ஆழியில் கலக்கும்முன் அணை செய்தாயா?
நான்: இனி நான் என்ன செய்ய? சொல்வாயா?
காவிரி: சினிமா பார்த்து சிரி
கிரிக்கட், பாப்கார்ன் கொறி!
மழுங்கி போனதே உன் வெறி
நான்: தாயே என்னை மன்னிப்பாயா?
காவிரி: எழுந்து நில்! தயக்கம் கொல்!
இரைப்பை நிரப்புவது கலப்பை!
இதை உணராதவன் வெறும் தோல் பை
நான் உனக்கும் அன்னை
கன்னடர் உந்தன் உடன் பிறப்பு
காவிரியும் உனது நீர்ப் பரப்பு
இதை உரக்கச் சொல்; உன் உரிமை சொல்