Publish Date: Mon, 12 Mar 2018 (13:39 IST)
Updated Date: Mon, 12 Mar 2018 (13:43 IST)
பழைய விஜயகாந்தை மீண்டும் தமிழகம் பார்க்கும் என அவரின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலில் இறங்கி 10-15 சதவீத வாக்குகளை பெறும் அளவுக்கு முன்னேறினார். ஜெ. முதல்வராக இருந்த போது எதிர்கட்சி தலைவராகவும் இருந்தார். ஆனால், பொது இடங்களில் கோபப்படுவது, தொண்டர்களை அடிப்பது என அவரின் நடவடிக்கைகள் அவர் மீதான செல்வாக்கை சரித்தது. மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியோடு கூட்டணி வைத்து தேமுதிக போட்டியிட்ட இடங்களில் டெபாசிட் கூட கிடைக்கவில்லை.
மேலும், உடல் நலக்குறைபாடு காரணமாக சரியாக பேச முடியாமலும் அவர் அவதிப்படுகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேமுதிக சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்த்தில் பிரேமலதா கலந்து கொண்டு பேசியதாவது:
சிங்கத்திற்கு நிகரான கேப்டனை நீங்கள் மீண்டும் பார்ப்பீர்கள். மைக்கப் பிடித்தால் ஒரு மணி நேரம் பேசும் கேப்டனை மீண்டும் தமிழகம் பார்க்கும். ராஜா மாதிரி நடக்கும் அவரின் வீர நடையை பார்ப்பீர்கள். எங்களுக்கும் காலம் வரும். அப்போது கேப்டன் யார், அவாது தொண்டர்கள் யார் என்பதை அனைவரும் பார்ப்பார்கள்” என அவர் ஆவேசமாக பேசினார்.