Publish Date: Wed, 08 Aug 2018 (07:25 IST)
Updated Date: Wed, 08 Aug 2018 (07:28 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் மரணத்தை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விம்பி அழுதுள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார். அவரின் மரணம் திமுக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் “ கலைஞர் இறந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். திமுக என்கிற கட்சியை அவர் கட்டுப்பாடாக வைத்திருந்தார். நான் அமெரிக்கா வந்திருந்தாலும் என் நினைவுகள், எண்ணம் அனைத்தும் கருணாநிதியின் மேலேயே இருக்கிறது. என்னை விஜி விஜி என பாசமாக அழைப்பார். அவரின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை” எனக் கூறி அதற்கு மேல் பேச முடியாமல் விம்மிய அவர் கதறி அழுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.