தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்ட நிலையில் தேதியை தள்ளி வைக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தினார். தமிழக வெற்றிக் கழகம் தென் தமிழகத்திலும் கட்சியை வலுப்படுத்தும் விதமாக 2வது மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளது.
மதுரையில் தவெகவின் மாநாடு ஆகஸ்டு 25ம் தேதி நடைபெறும் என விஜய் அறிவித்த நிலையில், அதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆகஸ்டு 25ம் தேதி விஜயகாந்த் பிறந்தநாள் வரும் நிலையில் அவரது ஊரான மதுரையில் விஜய் மாநாடு நடத்துவது செண்டிமெண்டாக செட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் தனது தேமுதிக கட்சி மாநாட்டை மதுரையில்தான் நடத்தினார்.
ஆனால் காவல்துறையோ ஆகஸ்டு 25க்கு பதிலாக வேறு தேதியில் மாநாடு நடத்த முடியுமா என தவெகவிடம் கேட்டுள்ளதாக தகவல். ஆகஸ்டு 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடைபெற உள்ளதால் பல பகுதிகளிலும் அதற்கு முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், இதற்கிடையே மாநாடு நடத்தினால் காவல்துறை முழு அளவில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தவெக தேதியை மாற்றுமா அல்லது குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Edit by Prasanth.K