Publish Date: Sat, 09 Apr 2022 (12:25 IST)
Updated Date: Sat, 09 Apr 2022 (13:13 IST)
கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து அமித்ஷாவின் கருத்துக்கு தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
நாடு முழுவதும் மக்கள் இந்தி பேச, படிக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. எனினும் பல மாநிலங்களில் இந்தி திணிப்பால் தாய் மொழி அழியும் அபாயம் உள்ளதாக பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழி நெகிழ்வடையாத நிலையில் அது பரவாது. அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்தர்.
இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில்,
வடக்கே வாழப்போன தமிழர் இந்தி கற்கலாம் தெற்கே வாழவரும் வடவர் தமிழ் கற்கலாம் மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம் இதற்குமேலும் இந்தியா? தாங்குமா இந்தியா?இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.