Publish Date: Fri, 25 Oct 2019 (10:08 IST)
Updated Date: Fri, 25 Oct 2019 (11:11 IST)
சசிகலாவின் விடுதலையில் சிக்கல்கள் உள்ளதாக சொல்லப்படும் கேள்விக்குப் பதிலளித்த டிடிவி தினகரன் அவர் சரியான நேரத்தில் விடுதலையாவார் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சசிகலா நன்னடத்தைக் காரணமாக நவம்பர் 1 ஆம் தேதியே விடுதலையாவார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அதன் பிறகு நன்னடத்தை விதிகள் அவருக்குப் பொருந்தாது என கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் அவர் விடுதலையானதும் அமமுகவில் சேராமல் அதிமுகவில் தான் சேருவார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம் கேள்வி எழுப்பியபோது ‘அமமுகவில் உள்ள அனைவரும் அதிமுகவில் சேர மனு அளித்திருப்பது போல அவர்கள் பேசுகிறார்கள். இடைத் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டோம் என்பதற்காக அவர்கள் எதை நினைத்ததை எல்லாம் பேசுவார்கள். துரோகிகளுடன் அமமுக இணைவதற்கு வாய்ப்பே இல்லை.’ எனக் கூறினார்.
சசிகலா விடுதலையில் சிக்கல் உள்ளதாக ஒரு நிரூபர் கேட்டபோது ’ சசிகலா விடுதலையில் எந்த சிக்கலும் இல்லை. உங்களின் யூகங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. பரபரப்பான செய்தி வேண்டும் என்பதற்காகக் கேள்வி கேட்காதீர்கள்.’ எனக் கடுமையாகப் பேசினார்.