Publish Date: Fri, 18 Oct 2019 (09:21 IST)
Updated Date: Fri, 18 Oct 2019 (09:24 IST)
துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் எப்போதும் இணைய வாய்ப்பே கிடையாது என டிடிவி தினகரன் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் மதுரையில் செய்தியாளர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதிமுகவை ஆதரிப்பார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது பற்றி உங்களுடைய கருத்து என்னவென கேட்கப்பட்டது. இதற்கு தினகரன் அளித்த பதில் பின்வருமாறு,
யார் யாரோ உளறுவதற்காக என்னிடம் கேள்வி கேட்காதீர்கள், வேடிக்கையாக பேசுவதை கேள்வியாக கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது.
விரைவில் ஒரு சில துரோகிகளை நீக்கிவிட்டு மற்ற அனைவரும் எங்களோடு வந்து இணைவார்கள். சிறையில் இருக்கும் சசிகலா பேச முடியாத காரணத்தால் வாய்க்கு வந்தபடி பலர் பேசுகிறார்கள் என பதில் அளித்தார்.
சசிகலா சிறைக்கு செல்லும் போது அதிமுக மீதான தனது கவனம் என்றும் மாறாது என கூறிய நிலையில், டிடிவி தினகரன் சசிகலா அதிமுகவிற்கு ஆதரவு தரமாட்டார் என கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக சசிகலாவின் நிலைபாடு குறித்து பேச, அவர் வெளியில் வந்தால்தான் அவரின் உண்மையான நிலைபாடு என்னவென தெரியும்.