Publish Date: Tue, 05 Sep 2023 (12:56 IST)
Updated Date: Tue, 05 Sep 2023 (12:57 IST)
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தில் ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.R.சுந்தரராஜ் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
விவசாய நிலம் அமைந்திருக்கும் இடத்தில் பொதுப்பாதை மற்றும் நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து மின்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் காற்றாலை நிறுவனத்தின் செயலை தட்டிக் கேட்கும் போது திரு.R.சுந்தரராஜ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தனியார் காற்றாலை நிறுவன ஊழியர்கள் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் திரு.R.சுந்தரராஜ் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
விவசாய நிலங்கள் தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு திரு.R.சுந்தரராஜ் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.