Publish Date: Tue, 06 Mar 2018 (21:34 IST)
Updated Date: Tue, 06 Mar 2018 (21:45 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டரில் அவர், லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா சிலை.. என்று பதிவு செய்தார்.
இதனால் பல விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தது. பல அரசியல் தலைவர்கள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் டிடிவி தினகரனும் எச்.ராஜாவின் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தினகரன் கூறியதாவது, சிலையாக மட்டுமில்லாமல், தமிழக மக்களின் சிந்தையிலும் என்றென்றும் நிலைத்திருக்கும் சமூக நீதியின் தலைமகன், பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் சிலை தமிழகத்தில் இடிக்கப்படும் என ஆணவத்தோடு கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜாவுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
பொறுப்பற்ற வகையிலும், முதிர்ச்சியற்ற தன்மையோடும் கருத்து சொல்லும் எச். ராஜா தனது போக்கை இத்தோடு மாற்றிக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.