Publish Date: Tue, 06 Mar 2018 (16:57 IST)
Updated Date: Tue, 06 Mar 2018 (16:59 IST)
இன்று காலை பெரியார் சிலையை உடைப்பேன்று எச்.ராஜா தனது முகநூலில் கூறிய கருத்துக்கே இன்னும் பரபரப்பு நீங்கவில்லை. அவரது கட்சியின் மாநில தலைவர் தமிழிசையே ராஜாவின் கருத்து பாஜகவின் கருத்தல்ல என்று கூறி ஒதுங்கிவிட்ட நிலையில் வேறு வழியின்று எச்.ராஜா தனது அந்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்கினார்.
இந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் குறித்து நேற்று ரஜினி பேசியது குறித்து கருத்து தெரிவித்த ராஜா, 'தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என திரு.ரஜினிகாந்த் அவர்கள் கூறியுள்ளது உண்மை. ஏனெனில் செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைவிற்குப் பின்பு கூட திமுக மீது யாருக்கும் நம்பிக்கை வரவில்லை என்பதையே ஆர்.கே. நகர் எடுத்துக் காட்டியுள்ளது' என்று கூறியுள்ளார்.
அரசியல் வெற்றிடம் குறித்த கருத்தை தாம் ஏற்கவில்லை என்று தமிழிசை கூறிய நிலையில் அந்த கருத்துக்கு மாறாக ரஜினியின் வெற்றிடம் குறித்து உண்மை என்று எச்.ராஜா கூறியுள்ளதால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.