Publish Date: Wed, 30 Oct 2019 (12:21 IST)
Updated Date: Wed, 30 Oct 2019 (12:22 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை தீவிரமடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் சூழலில், தற்போது அது தாழ்வு நிலையிலிருந்து தாழ்வு மண்டலமாக மாறி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் மழை அதிகரிக்கும் எனவும், முக்கியமாக சென்னையில் இன்று முழுவதும் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடற்கரையோர பகுதிகளான நாகப்பட்டினம் முதல் கோடியக்கரை வரையிலான பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.