Publish Date: Sat, 15 Mar 2025 (16:19 IST)
Updated Date: Sat, 15 Mar 2025 (16:20 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பதவிகளுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு கடந்த மார்ச் 28 அன்று வெளியானது. இதனை தொடர்ந்து, முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடத்தப்பட்டபோது, மொத்தம் 1.59 லட்சம் பேர் எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டனர்.
இதற்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டன, அதில் 1,988 தேர்வர்கள் வெற்றி பெற்று, முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இதன் அடிப்படையில், டிசம்பர் 10 முதல் 13 வரை முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது.
மார்ச் 14ஆம் தேதி இரவு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த முதன்மைத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் சுமார் 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற இந்த தேர்வர்கள் ஏப்ரல் 7 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வு மற்றும் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.