Publish Date: Sun, 09 Feb 2020 (14:59 IST)
Updated Date: Sun, 09 Feb 2020 (15:01 IST)
தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சியில் இருக்கும் நிலையில் இந்த முயற்சிக்கு தமிழக அரசு ஆதரவு கொடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு ஆதரிக்காது என்று ஏற்கனவே முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் தெரிவித்து வந்தனர்
இந்த நிலையில் டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்துவிட்டார். எனவே இனிமேல் டெல்டா பகுதியில் மீத்தேன் உள்பட எந்த ஒரு தொழிற்சாலை தொடங்க முடியாது என்பதால் மீத்தேன் திட்டத்துக்கு ஆப்பு வைக்கப் பட்டுள்ளதாக கருதப்படுகிறது
டெல்டா பகுதி மட்டுமின்றி புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முதல்வர் விரைவில் சட்டமன்றத்தில் சட்டமாக கொண்டுவர விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு விவசாய சங்கமும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சீமான், டாக்டர் ராமதாஸ் ஆகியோர்களும் இந்த திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி தராது என்றும் முதலமைச்சர் உறுதி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி கிடையாது என்று முதலமைச்சர் உறுதிபடக் கூறியுள்ளதால் பாஜக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது
webdunia
Publish Date: Sun, 09 Feb 2020 (14:59 IST)
Updated Date: Sun, 09 Feb 2020 (15:01 IST)