Publish Date: Tue, 10 Sep 2019 (08:15 IST)
Updated Date: Tue, 10 Sep 2019 (08:17 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். தமிழகத்தில் இருக்கும்போது பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் காணப்படும் முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது கலர் கலராக கோட், சூட் போட்டு அசத்தினார். முதல்வரின் கோட், சூட் போட்ட புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலானது
இந்த நிலையில் இன்று காலை முதல்வர் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பினார். அவரை தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வரிடம் கோட், சூட் உடை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, ‘தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லும்போது அவர்கள் உடையில் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்றும், வெளிநாட்டு தொழிலதிபர்களை சந்திக்கும்போது அவர்கள் உடையில் இருந்தால்தானே ஒரு மரியாதை இருக்கும். நாம் தொழில் தொடங்க போகவில்லை, தொழில் முதலீடுகளை ஈர்க்கவே சென்றுள்ளோம்’ என்று விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து கூறியபோது ‘எந்த வெளிநாட்டு தொழிலதிபராவது, அல்லது வெளிநாட்டு தலைவர்களாவது தமிழகமோ அல்லது இந்தியாவிற்கோ வரும்போது நம்முடைய கலாச்சார உடைகளை அணிகின்றார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.