Publish Date: Thu, 25 Feb 2021 (11:24 IST)
Updated Date: Thu, 25 Feb 2021 (11:26 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் நடைபெறாத சூழலில் 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு தேர்வில் ஆல் பாஸ் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த வகுப்பிற்கான பாடங்களை பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் படித்து வந்தனர். மாணவர்களின் பாடச்சுமையை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது சட்டப்பேரவையில் பேசி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடப்பு ஆண்டில் 9,10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இந்த மூன்று வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை கேட்ட பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.