Publish Date: Sat, 20 Jan 2018 (14:23 IST)
Updated Date: Sat, 20 Jan 2018 (14:27 IST)
இனி வருடத்திற்கு ஒருமுறை தமிழக அரசு பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை நேற்று நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனால், சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்கள், இதற்கு முன் செலுத்தியதை விட இரண்டு மடங்கு தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், வெளியூர் செல்லும் பேருந்து கட்டணமும் இருமடங்கு உயர்ந்துள்ளதால், பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சரியான முன்னறிவிப்பின்றி இப்படி அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால், தாங்கள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும், திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இந்த விலை ஏற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இனிமேல் வருடத்திற்கு ஒரு முறை அரசு பேருந்துகளின் டிக்கெட் விலை மாற்றியமைப்படும் என தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இறுதியாக கடந்த 2011ம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பின் 7 வருடம் கழித்து தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இனிமேல் ஆண்டு தோறும் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதன் மூலம், வருடம் ஒரு முறை பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா என்ற சந்தேகமும், அச்சமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.