Publish Date: Fri, 19 Jan 2018 (22:50 IST)
Updated Date: Fri, 19 Jan 2018 (22:34 IST)
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்த ஒருசில நாட்களிலேயே பேருந்து கட்டணத்தை அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பேருந்து கட்டணம் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதால் இனி அடுத்த பேருந்து கட்டணம் ஆறு ஆண்டுகளுக்கு பின்னரே உயர்த்தப்படும் என்று பொதுமக்கள் நினைத்துவிட முடியாத அளவுக்கு தமிழக அரசின் அறிக்கை ஒன்று அதிர்ச்சி அளித்துள்ளது. ஆம், இனி பேருந்து கட்டண உயர்வு என்ற அதிர்ச்சி அறிக்கை அடிக்கடி நிகழும் என தெரிகிறது
இன்று தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் கிரீஸ் எண்ணெய் விலை ஏற்றங்கள், இயக்கச் செலவுகள், பழுது நீக்கும் செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போன்றவற்றை உள்ளடக்கிய அளவீட்டு குறியீட்டின் அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினால் பேருந்துக் கட்டணம் மாற்றியமைக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளதால் இனி அடிக்கடி பேருந்து கட்டணங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.