சென்னையின் சில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில், இன்று காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், மக்கள் அதிக வெப்பத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று அதிகாலை திடீரென சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு மழை பெய்ததாக தகவல்கள் உள்ளன.
ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில், அதாவது இன்று காலை 10 மணிக்குள், திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கக்கடலில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்தாலும், பொதுவாக வறண்ட வானிலையே இருக்கும் என்றும் இன்று சில மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.