Publish Date: Tue, 24 Mar 2020 (21:48 IST)
Updated Date: Tue, 24 Mar 2020 (21:50 IST)
தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா
தமிழகத்தில் ஏற்கனவே 15 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் மூவருமே சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய 65 வயது நபர் ஒருவருக்கும், லண்டனில் இருந்து சென்னை திரும்பிய 55 வயது பெண் ஒருவருக்கும், சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 55 வயது பெண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்னும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் கடைபிடித்தால் கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது என்றும், கட்டுப்பாட்டை மீறி வெளியே வந்தால் விபரீதம் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.