Publish Date: Thu, 24 May 2018 (14:03 IST)
Updated Date: Thu, 24 May 2018 (14:05 IST)
தூத்துகுடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையத்தை தமிழக அரசு முடக்கிய நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்லூரியில் விண்ணபிக்க முடியாமல் அவதியுற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தூத்துகுடி கலவரத்தை முன்னிட்டு தமிழக உள்துறை தூத்துகுடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையத்தை முடக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி அடைந்த மாணவர்கள் ஆன்லைனில் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணபித்து வருகின்றனர். அதிலும் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இந்த ஆண்டு முதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இணையம் முடக்கப்பட்டுள்ளதால் இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஒருசிலர் மாணவர்கள் மதுரை உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர்களின் நலனை கணக்கில் கொண்டு உடனடியாக முடக்கப்பட்ட இணையத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.