Publish Date: Sat, 06 Apr 2024 (08:28 IST)
Updated Date: Sat, 06 Apr 2024 (08:29 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருநாவுக்கரசர் மீண்டும் அதே தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதி திடீரென அதிமுகவுக்கு கொடுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
திருச்சி இல்லாவிட்டால் மயிலாடுதுறை தொகுதியாவது தனக்கு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு இந்த முறை போட்டியிடவே வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் திருநாவுக்கரசரை பாஜகவில் இழுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் திருநாவுக்கரசுக்கு நெருக்கமான ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப் போவதில்லை என்ற முடிவில் திருநாவுக்கரசர் உறுதியாக இருக்கிறாராம். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு சென்ற விஜயதாரணிக்கு பாஜகவில் என்ன விதமான மரியாதை கிடைத்தது என்பதை அவர் அறிந்து தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் பாஜக தரப்பில் தீவிரமாக திருநாவுக்கரசரை இழுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.