எச்சரிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்: இனி எல்லாருக்கும் ஆபத்து தான்!
எச்சரிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்: இனி எல்லாருக்கும் ஆபத்து தான்!
Publish Date: Fri, 01 Sep 2017 (15:36 IST)
Updated Date: Fri, 01 Sep 2017 (15:38 IST)
தினகரன் அணியின் முக்கிய ஆதரவாளராகவும் அவரது விசுவாசியாகவும் உள்ளவர் ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன். இவர் எடப்பாடி பழனிச்சாமி அணி இன்னமும் நல்ல முடிவு எடுக்காவிட்டால் அனைவருக்கும் ஆபத்து என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்து அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கிய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் புதுவையில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன், இன்றோ அல்லது நாளைக்குள்ளோ நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். நாங்கள் இறுதிக் கட்டத்துக்கு வந்து விட்டோம். எடப்பாடி பழனிசாமி அணியினர் எங்களிடம் பேச்சு வார்த்தைக்கு வர நாங்கள் விரும்பவில்லை.
நேற்று அமைச்சர்கள் சிலர் தினகரன் அணியையும் சேர்க்கக் கூறியுள்ளனர். நீங்கள் வேண்டுமென்றால் தினகரனை சந்தித்துப் பேசுங்கள். மத்திய அமைச்சரவையில் அதிமுக சேர்ந்தால் நல்லதுதான். எங்களுக்கு ஊழலற்ற நல்லாட்சி தேவை மற்றும் இரட்டை இலையும் தேவை.
எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை எங்கள் அணிக்கு கூடிக்கொண்டே வருவதால் இனியும் நல்ல ஒரு முடிவை எடுக்காவிட்டால் அனைவருக்கும் ஆபத்து ஏற்படும் என அவர் தெரிவித்தார்.