Publish Date: Fri, 01 Sep 2017 (06:04 IST)
Updated Date: Fri, 01 Sep 2017 (06:54 IST)
சென்னையில் தள்ளுவண்டியில் கடை வைத்து ஆயிரக்கணக்கானோர் பிழைப்பு நடத்தி வரும் நிலையில் அவர்களும் பதிவுச்சான்றிதழ் பெறுவது கட்டாயம் என சென்னை கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொழில் செய்பவர்கள் அனைவரையும் சமீபத்தில் ஜிஎஸ்டிக்கு கீழே கொண்டு வந்த நிலையில் அடுத்ததாக அரசின் கவனம் தள்ளுவண்டி, பிளாட்பாரம் தெருவில் கூவி வியாபாரம் செய்பவர்களை நோக்கி சென்றுள்ளது. இதன்படி சென்னையில் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்டம் 2006-ன் கீழ் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் மற்றும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தள்ளுவண்டியில் உணவுப்பொருள் விற்பவர்கள் முதல் 5 ஸ்டார் ஓட்டல் வரை உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் பெற வேண்டும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
இதன்படி தள்ளு வண்டி கடை, தெருவில் கூவி விற்போர் ஆகியோர் ரூ.100 செலுத்தி உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் சான்றிதழ் பெறவேண்டியது கட்டாயமாகியுள்ளது. ஆன்லைன் மூலம் பதிவு சான்றிதழ் பெற www.foodlicensing.fssai.gov.in என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.