Publish Date: Sat, 21 Apr 2018 (13:45 IST)
Updated Date: Sat, 21 Apr 2018 (13:52 IST)
கரூர் அருகே ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சியில், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு கொடுக்கும் திட்டம், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையினால் கொடுக்கப்பட்டது.
முற்றிலும் எரிவாயு இணைப்பு இலவசம் ஆனால், கேஸ் ஸ்டவ் மற்றும் சிலிண்டர்கள் மட்டும் பணம் பெற்று மக்களிடம் கொடுக்கப்படும் இந்த திட்டமானது, கரூர் அருகே ஆத்தூர் பூலாம்பாளையம், சின்னதாராபுரம் உள்ளிட்ட மூன்று இடங்களில் 300 பேருக்கு எரிவாயுக்கள் சிலிண்டருடன் கொடுக்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரையிடம், தமிழக ஆளுநர் பெண் நிருபரை கன்னத்தில் கிள்ளியது குறித்து நடிகர் எஸ்.வி.சேகர், பா.ஜ.க ஹெச்.ராஜா ஆகியோர் தவறுதலாக பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் கூறிய அவர் “ஆண், பெண் அனைவரும் சமமே, ஆகவே, பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று கூறுவது தவறுதலாகும், அதை ஒழிக்கவே பெரியார் அரும்பாடுபட்டார். இதில் பெண்களை அவமானப்படுத்துவதற்கும், பெண் நிருபர் குறித்து சர்ச்சை விடுத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.
தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டுமென்று பல்வேறு கட்சியினர் ஆர்பாட்டம் மற்றும் போராட்டங்கள் பற்றிய கேள்விக்கு பதில் கூறாமால், அவர் வாகனத்தை நோக்கி சென்றார்.