Publish Date: Mon, 18 May 2020 (11:49 IST)
Updated Date: Mon, 18 May 2020 (12:15 IST)
மதுக்கடைகளில் ஒரு நாளுக்கான டோக்கன் எண்ணிக்கை உயர்த்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் கடந்த 7 ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் 9 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக அதிரடியாக மூடப்பட்டது. அதன்பின் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகின்றன.
கடந்த சனிக்கிழமை டாஸ்மாக்கில் 163 கோடியும் நேற்று 133 கோடியும் மதுக்கள் விற்பனை ஆனதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை இரண்டு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஆகி வந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு மணி நேரம் நீட்டித்து அதாவது இரவு 7 மணி வரை விற்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது
மேலும் நாள் ஒன்றுக்கு 500 டோக்கன் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் 750 டோக்கன் விநியோகம் செய்யப்படும் என டாஸ்மாக் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் 500க்கு பதிலாக 650 டோக்கன் வரை விநியோகித்து மதுவிற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல மாவட்ட கடைகளிலும் டோக்கன் எண்ணிக்கை உயர்த்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.