Publish Date: Mon, 18 May 2020 (10:44 IST)
Updated Date: Mon, 18 May 2020 (10:46 IST)
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் 9ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக அதிரடியாக மூடப்பட்டது. அதன்பின் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகின்றன. கடந்த சனிக்கிழமை டாஸ்மாக்கில் 163 கோடியும் நேற்று 133 கோடியும் மதுக்கள் விற்பனை ஆனதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை இரண்டு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஆகி வந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு மணி நேரம் நீட்டித்து அதாவது இரவு 7 மணி வரை விற்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது
டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும் சமூக ஆர்வலர்கள் இது குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு மணி நேரம் மது விற்பனை நீட்டித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது