Publish Date: Fri, 05 Jul 2024 (18:01 IST)
Updated Date: Fri, 05 Jul 2024 (18:02 IST)
டாஸ்மாக் மதுபான கடைகளில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்,.
மேலும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த டாஸ்மாக் தரப்பு சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.