Publish Date: Sat, 06 Oct 2018 (12:36 IST)
Updated Date: Sat, 06 Oct 2018 (12:37 IST)
நேற்று முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கேலி செய்துள்ளார்.
தினகரன் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது ஈபிஎஸ் ஆட்சியை கவிழ்க்க ஓபிஎஸ் திட்டமிடப்பட்டதாகவும் தினகரன் பரபரப்பு செய்திகளை வெளியிட்டார்.
இது குறித்து ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ’தினகரனை சந்தித்தது உண்மைதான் என்றும், தினகரன் மனம்விட்டுப் பேச வேண்டும் எனக் கூறியதால் அரசியல் நாகரிகம் கருதி சென்றதாகவும் கூறினார். மேலும் தினகரன் ஆட்சியைக் கலைத்துவிட்டு தான் முதல்வராக வேண்டும் என்ற நோக்கில் பேசியதால் தான் அதற்கு உடன் படவில்லை’ என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது ‘ஆட்சியை கலைக்கப் பார்ப்பதாக தினகரன் என் மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார். நான் இந்த ஆட்சியில் துணை முதல்வராக இருக்கிறேன். நானே எப்படி ஆட்சியைக் கலைப்பேன். நான் ஏற்கனவே மூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன் அதுவே போதும். கட்சியும் ஆட்சியும் அந்த குடும்பத்தின் கைகளில் சென்றுவிடக் கூடாது என்றுதான் நானே தர்மயுத்தம் நடத்தினேன்’ என்றும் கூறினார்.
இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை நக்கலான பதில் ஒன்றைக் கூறியுள்ளார். இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கோயில் சிலைகள் திருடு போவது குறித்துப் பேசினார். அப்போது பத்திரிக்கையாளர்கள் ஒபிஎஸ்-ன் தர்மயுத்தம் குறித்து கேட்டபோது ‘அது தர்மயுத்தமா அல்லது தர்மசங்கட யுத்தமா எனத் தெரியவில்லை’ என நக்கலாக பதிலளித்துள்ளார்.