Publish Date: Fri, 05 Oct 2018 (19:36 IST)
Updated Date: Fri, 05 Oct 2018 (19:38 IST)
கடந்த இரண்டு நாட்களாக தினகரன் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது ஈபிஎஸ் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடப்பட்டதாகவும் பரபரப்பு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் பத்திரிகையாளர்களை சந்தித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார்.பத்திரிகையாளர் சந்திப்பில் ஓபிஎஸ் கூறியதாவது:
நேற்று நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களும் எங்கள் இருப்பதை அறிந்து தினகரன் மனக்குழப்பத்தில் இருப்பதாகவும், அதன் வெளிப்பாடே என் மீது கூறப்படும் பொய்யான உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்கள் என்றும் ஓபிஎஸ் கூறினார்.
மேலும் மத்திய அரசோடு கூட்டு சேர்ந்து நான் ஆட்சியை கலைக்கப் பார்ப்பதாக தினகரன் என் மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார். நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். நான் இருக்கும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைப்பவன். என் மீது இப்படியொரு பழியை போடுவது அபாண்டம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்து மக்களை ஏமாற்றியவர் தினகரன் என்றும், நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற மனக்கவலையுடன் தினகரன் உள்ளார் என்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கூறினார்.
ஒற்றுமையாக இருக்கும் அதிமுக என்ற பேரியக்கத்தில் தங்கத்தமிழ்ச்செல்வன் மூலம் நேற்றில் இருந்து புதிய பிரச்சனையை கிளப்பி குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கின்றார். அவரது எண்ணம் ஈடேறாது என்றும் ஓபிஎஸ் கூறினார்.