இன்று நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், முதல்முறையாக ஸ்டாலின், மோடி பெயர்களை கூறி அனல் பறக்கும் வகையில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது:
தமிழ்நாடு மிகச் சுவாரஸ்யமான சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் முக்கியமான போட்டி திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்குள் மட்டும்தான் நிலவும்.
நேற்று அரசியலில் நுழைந்தவர்கள் கூட முதலமைச்சர் ஆக வேண்டும் என கனவு காண்கிறார்கள் என்று சொல்கிறீர்களே? அப்படி என்றால், ஏன் அந்த அழுத்தம் என் மீதும், என் கட்சியின் மீதும் மட்டும்?
அணை கட்டி ஆற்றைத் தடுக்கலாம், ஆனால் காற்றை தடுக்க முடியாது. தடுக்க முயன்றால், சாதாரண காற்று சூறாவளியாக மாறும், மேலும் சக்திவாய்ந்த புயலாகவே உருவெடுக்கும்.
மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே "பெயரை மட்டும் வீரமாகச் சொல்லிவிட்டால் போதாது; ஆட்சியிலும் அதை நிரூபிக்க வேண்டும். மக்கள் சக்தியுடன் கூடிய மக்கள் ஆட்சியை உருவாக்க உறுதியாக இருக்கிறோம். காற்றையும் மழையையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது, அதுபோலத்தான் தமிழக வெற்றிக் கழக ஆட்சியையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
நாங்கள் அமைக்கவிருக்கும் அரசு அதிகாரப் பகிர்வுடன் இயங்கும். ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை 100% உறுதி செய்ய முடிவெடுக்கிறோம். சட்டம்-ஒழுங்கு உறுதியானதாக இருக்கும். கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சமத்துவ வளர்ச்சி எங்கள் இலக்கு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைப்பாளர்களின் பக்கம் நாங்கள் உறுதியாக நிற்போம். ஏனென்றால், எங்கள் உடன் எப்போதும் உழைப்பாளர்கள்தான் இருப்பார்கள்.
தமிழகம் விவசாய நிலம். விவசாயத்திற்கு எதிரான எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தின் நலனை பாதுகாக்க நாங்கள் எப்போதும் தயார், என ஆவேசமாக விஜய் பேசினார்.