Publish Date: Wed, 17 Jul 2019 (07:59 IST)
Updated Date: Wed, 17 Jul 2019 (08:04 IST)
கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் திரையரங்குகளுக்கு கூட்டம் வருவதில்லை என்றும் இதனால் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் கவலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாதது ஒரு காரணமாக இருந்தாலும், டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம் உள்பட பலவித கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் திரையரங்குகளுக்கு வருவதற்கு ரசிகர்கள் தயங்கி வருகின்றனர். குறிப்பாக குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வருவது பெருமளவு குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையை போக்க அருகில் உள்ள மாநிலங்கள் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக கேரளா அரசு சினிமா டிக்கெட்டுகளில் 10% அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதனால் அங்குள்ள ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் சமீபத்தில் ஆந்திராவில் முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் கிடையாது என அறிவித்துள்ளார்
இதே போல் தமிழகத்திலும் சினிமா டிக்கெட்டுகளில் சலுகை, மற்றும் பார்க்கிங் கட்டணம் தள்ளுபடி ஆகிய இரண்டையும் அறிவித்தால் நன்றி உடையவர்களாக இருப்போம் என பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இவர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கயுள்ள 'மாநாடு' என்ற படத்தை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது