Publish Date: Wed, 11 Mar 2026 (18:12 IST)
Updated Date: Wed, 11 Mar 2026 (18:13 IST)
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றார்.. மதியம் 12:30 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு விஜய் இரவு 7 மணிக்குதான் அந்த பகுதிக்கு சென்றார். எனவே அவரை பார்ப்பதற்காக பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர்.. அதோடு பல மணி நேரம் தண்ணீர், உணவு இன்றி மக்கள் வெயிலில் நின்றிருந்ததால் சோர்வு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.. அதோடு கூட்ட நெரிசலில் சிக்கி தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பலரும் மயக்கமடைந்தனர்.. அதில் பலரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.. இறுதியாக 41 வரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது..
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.. ஏற்கனவே தவெகவின் முக்கிய நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல் குமார் மற்றும் கரூர் உயர் போலீஸ் அதிகாரிகளை டெல்லிக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். மேலும் தவெக தலைவர் விஜயை இரண்டு முறை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.. மேலும் மூன்றாவது முறை விஜய் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.
அதோடு, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.. அந்த வகையில்தான் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி கரூர் சம்பவம் நடைபெற்ற போது எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் அங்கு போனார்கள்.. நானும் அங்கு சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தேன்.. அப்படியென்றால் எல்லோருக்கும்தான் சம்மன் அனுப்ப வேண்டும்.. எனக்கு மட்டும் ஏன் அனுப்பியிருக்கிறார்கள் என தெரியவில்லை.. அதற்குள் ஆழமாக நான் செல்ல விரும்பவில்லை.. என்னிடம் என்ன கேட்கப்போகிறார்கள் என்று பார்ப்போம் என அவர் கூறினார்.