தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜகவினர் நாதகவை அழைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் பரபரக்கத் தொடங்கியுள்ளது. பாஜக தமிழக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கு குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே இந்த கூட்டணியில் சீமானின் நாம் தமிழர் கட்சியையும் இணைக்க பாஜக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. சமீபத்தில் சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சென்று சந்தித்திருந்தார். சமீபத்தில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலையும், சீமானும் ஒரே மேடையில் ஒருவரையொருவர் புகழ்ந்து பேசினர்.
இந்நிலையில் தற்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணிக்காக நாம் தமிழர் கட்சிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களிலும் நிறைய உதாரணங்கள் உள்ளன” என பேசியுள்ளார்.
இந்நிலையில் பாஜகவின் இந்த அழைப்பை சீமான் ஏற்பாரா? அல்லது முந்தைய தேர்தல்களை போலவே நாம் தமிழர் தனித்து நின்று போட்டியிடுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K