Publish Date: Mon, 04 Nov 2019 (13:53 IST)
Updated Date: Mon, 04 Nov 2019 (14:01 IST)
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு குறித்து சீமான் “ வள்ளுவனை அவமதித்தால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.
திருவள்ளுவர் காவி அங்கி, நெற்றியில் திருநீர் அணிந்தது போல் சமூக வலைத்தளத்தில் வைரலான புகைப்படம் தமிழகத்தில் பெரும் விவகாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் சாணியை பூசி அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதனை தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், மதிமுக பொது செயலாளர் வைகோ அகியோர் “திருவள்ளுவரை இந்துத்துவா சிமிழுக்குள் அடைக்கப்பார்க்கிறார்கள்” என தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ”திருவள்ளுவருக்கு காவி அணிவித்து, தன்வயப்படுத்த நினைக்கிறார்கள். வள்ளுவரை இழிவுபடுத்தினால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” எனவும் எச்சரித்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா “சனாதன இந்து தர்ம கோட்பாட்டின் படியே திருக்குறள் வடிவமைக்கப்பட்டுள்ளது” என கூறியிருந்த நிலையில் சீமான் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.