ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் நீடிக்கும் கனமழையின் காரணமாக, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குப் பக்தர்கள் மலை ஏறுவதற்கு விதிக்கப்பட்ட தடையை வனத்துறை வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தின் சாப்டூர் வனச்சரகம் எல்லைக்குள் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு சதுரகிரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு பிறகு, இங்கு அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வந்தனர். சமீப காலமாக, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சதுரகிரி மலையேறும் பாதையில் உள்ள நீரோடைகள் மற்றும் காட்டாறுகளில் நீர் வரத்து அபாயகரமாக அதிகரித்துள்ளது. மேலும், மலைப்பகுதியில் சாரல் மழையும் விடாமல் பெய்து வருகிறது.
பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சதுரகிரி மலையேறுவதற்கு அக்டோபர் 21 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.