Publish Date: Fri, 08 Apr 2022 (11:07 IST)
Updated Date: Fri, 08 Apr 2022 (11:09 IST)
அதிமுக பொதுச்செயலாளராக சசிக்கலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த நிலையில் அவர் வகித்த அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை சசிக்கலா ஏற்றுக் கொண்டார். பின்னர் 2017ல் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்ற நிலையில் அவரையும், டிடிவி தினகரனையும் அதிமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்குவதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் இல்லாமல் பொதுக்குழு கூட்டி எடுத்த முடிவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என சசிக்கலா தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈபிஎஸ் – ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையில், தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதி விடுப்பு எடுத்ததால் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.