Publish Date: Wed, 09 Jan 2019 (15:25 IST)
Updated Date: Wed, 09 Jan 2019 (15:27 IST)
பொங்கலுக்காக இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களில் முன்பதிவு இன்று அமைச்சர் விஜய்பாஸ்கரால் தொடங்கிவைக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. ஜனவரி 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும் சென்னையில் இருந்து 14000 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
இந்த சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு மையங்களை இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் 30 முன்பதிவு மையைங்கள் இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 6 வெவ்வேறு இடங்களில் சிறப்பு தற்காலிக பேருந்து நிலையங்கள் இதற்காக இயக்கப்படுகின்றன.
ஆந்திரா செல்லும் பேருந்துகள், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், புதுச்சேரி, ஈ.சி.ஆர். வழியாகச் செல்லும் பேருந்துகள் கே.கே.நகரில் இருந்தும். வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களுக்குப் பூந்தமல்லியில் இருந்தும், பிற மாவட்டங்களுக்குக் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இதுபோலவே பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் ஊர்களில் இருந்து நகரங்களுக்குத் திரும்ப சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.