தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுகவும், ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்கிற முயற்சியில் அதிமுக- பாஜக கூட்டணியும் பல வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில்தான் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார். அண்ணாமலைக்கு சிங்கா நல்லூர், மதுரை தெற்கு, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாதபுரம், காரைக்குடி போன்ற தொகுதிகளை நயினார் நாகேந்திரன் ஒதுக்கியிருந்தார்.
அண்ணாமலையின் அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை.. அதுதான் காரணம் என நயினார் நாகேந்திரன் சொன்னாலும் அது உண்மை இல்லை.. அதற்கு பின்னணியில் வேறு சில காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.. தமிழகத்தில் பாஜகவையும் வளர்த்ததில் அண்ணாமலைக்கு முக்கிய பங்குண்டு. மேலும் அதிமுகவை தவிர்த்து விட்டு பாஜக தலைமையில் தமிழகத்தில் புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்பது அண்ணாமலையின் நோக்கமாக இருந்தது.
அதாவது ஓபிஎஸ், டிடிவி தினகரன், விஜயின் தவெக உள்ளிட்ட சிலரை இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அண்ணாமலை இறங்கினார்.. ஆனால் நயினார் நாகேந்திரன் நாகேந்திரனால்தான் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.. ஒருபக்கம் அதிமுக மூத்த தலைவர்களை அண்ணாமலை விமர்சித்ததால் கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்குங்கள் என அமித்ஷாவிடம் சொன்னதால்தான் அவர் தூக்கப்பட்டார்.
எனவே, பழனிச்சாமி மீது அண்ணாமலைக்கு கோபம் இருக்கிறது. ஒருபக்கம் பழனிச்சாமியை முதல்வராக்குவது போலவே செயல்படும் நயினார் நாகேந்திரன் மீதும் அண்ணாமலைக்கு அதிருப்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, நயினார் நாகேந்திரன் தலைமைக்கு கீழ் பணியாற்ற அவர் விரும்பவில்லை எனத்தெரிகிறது.
ஒருபக்கம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்திருப்பது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள். அதோடு தலைவர் பதவியை தன்னிடமிருந்து பிடுங்கிவிட்டு ஒரு தேர்தல் பொறுப்பாளராக தன்னை நியமித்து ஒரு சிறிய வட்டத்துக்குள் தன்னை அடைக்க பார்க்கிறார்கள் என்கிற ஆதங்கமும் அண்ணாமலையிடம் இருப்பதாக சொல்கிறார்கள்.
எனவேதான் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து அவர் விலகியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இன்னொரு பக்கம் தமிழக பாஜக தலைவர் பதவி போன போதே அண்ணாமலை இனிமேல் தேசிய அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார் என்றெல்லாம் சொன்னார்கள்.. எனவே ஒரு ராஜ்யசபா பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என அவர் பாஜாவுக்கு மறைமுகமாக சொல்வது போல இருக்கிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் பேசுகிறார்கள்.. ஒருபக்கம், அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.