Publish Date: Mon, 02 Apr 2018 (08:43 IST)
Updated Date: Mon, 02 Apr 2018 (09:22 IST)
காங்கிரஸ் ஆதரவு தந்தால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருக்கிறோம் என மக்களவை துணை சபாநாயகரும், அதிமுகவின் மூத்த தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம், தமிழக அரசு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மாணவ அமைப்பினர், விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில் ஜல்லிக்கட்டுக்கு மக்கள் போராடியது போல், காவிரி விவகாரத்திற்கும் அனைத்து அமைப்பினரும் போராடி மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்றார். மேலும் காங்கிரஸ் ஆதரவு தந்தால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.