மதுரையில் அரசு பேருந்தில் டிரைவர் திடீரென ப்ரேக் போட்டதில் கண்டக்டர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்துள்ளது. மதுரையை கடந்த ஒத்தக்கடை அருகே பேருந்து வேகமாக சென்றுக் கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே தடுப்புப்பலகை வைக்கப்பட்டிருந்ததால் டிரைவர் திடீரென ப்ரேக் பிடித்துள்ளார்.
அந்த சமயம் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா நிலைத்தடுமாறி பேருந்தின் பின்புற கதவு வழியாக வெளியே விழுந்தார். வேகமாக வெளியே விழுந்ததில் அவர் தலையில் பலத்த அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் உடனடியாக டிரைவர் ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார்.
ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அருகில் இருந்த ஆட்டோவில் கருப்பையாவை ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் கருப்பையா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K