Publish Date: Thu, 12 Mar 2020 (09:54 IST)
Updated Date: Thu, 12 Mar 2020 (09:57 IST)
நடிகர் ரஜினிகாந்த் தனது மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க உள்ள நிலையில் செய்தியாளர்கள் சந்திப்புக்கும் பெரிய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தான் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்திருந்த ரஜினி, படங்களில் நடித்தவாறே அரசியல் செயல்பாடுகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்திய ரஜினி, நிர்வாகிகளால் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அடைந்து விட்டதாக தெரிவித்தார். அதை பிறகு சொல்வதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று தொடர்ந்து இரண்டாவது முறையாக மாவட்ட நிர்வாகிகளுடன் ராகாவேந்திரா மண்டபத்தில் சந்திப்பு நடத்த இருக்கிறார் ரஜினிகாந்த். அதை முடித்துக் கொண்டு லீலா பேலஸில் பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் ரஜினிகாந்த் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் என்ன என்பது பற்றி கூறுவார் என்றும், கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட போகிறார் என்றும் கூறப்படுகிறது.
இதனால் காலை முதலே ரஜினி வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொடிகள் சகிதம் குழுமியுள்ளனர்.