Publish Date: Mon, 16 Dec 2019 (09:47 IST)
Updated Date: Mon, 16 Dec 2019 (09:48 IST)
சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வந்தது. இதனையடுத்து சென்னைக்கு குடிநீர் தரும் நீர்நிலைகள் அனைத்தும் மிக வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த ஆண்டு கோடையில் சென்னை மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்றே கருதப்படுகிறது
இந்த நிலையில் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மிதமான மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் சற்றுமுன்னர் சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு, ராயபுரம், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும் போரூர், விருகம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியில் உள்ளனர்.
சென்னையில் லேசானது முதல் மிதமான மழை ஓரிரு மணி நேரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும் இன்று விடுமுறை குறித்து எந்த அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது