புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பமாக, மூன்று பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. அப்போது, முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அரசு அமைய, இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த ராமலிங்கம், அசோக் பாபு, மற்றும் வெங்கடேசன் ஆகிய மூவருக்கும் நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இந்த மூவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளனர். இச்சம்பவம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ராஜினாமா குறித்து முதலமைச்சர் ரங்கசாமி தனது கட்சி எம்எல்ஏக்களுடன் அவசரமாக ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து, புதிய நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக காரைக்காலை சேர்ந்த ராஜசேகரன், ஊசுடு தொகுதியை சேர்ந்த தீப்பாயந்தன், மற்றும் பாஜக மூத்த நிர்வாகி செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் மாற்றங்கள் புதுச்சேரி அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு வித்திடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.